கணணித்தமிழ்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ஒவ்வொரு நாளும் கணினியின் உபயோகம் பரவலாகிக் கொண்டே வருவதைப் பார்க்கிறோம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாக இணையம் திகழ்கிறது. தொடக்கத்தில் ஆங்கிலம் மட்டுமே கோலோச்சிவந்த இந்த ஊடகத்தில் இன்று அழகுத் தமிழில் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள், சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் இணையத்தின் வாயிலாக நம் திரைக்கு வந்து நம் வாசிப்புக்குத் தீனி போடுகின்றன. அதிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இணையம் ஒரு இன்றியமையாத பிணைப்பை தங்கள் தாய்ச் சமூகத்துடன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வாசிக்க நேரம் போதவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று இணையத்தில் தமிழ்த் தளங்கள் வளர்ந்து வருகின்றன.
அடுத்து, ‘வாசிப்பதெல்லாம் சரி, இது ஒரு வழிப்பாதையாக இருக்கிறதே, வாசிப்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்குமா?’ என்றும் தேடுகிறோம். அந்த வாய்ப்பை தான் வலைப்பதிவுகள் தருகின்றன.
‘என் கவிதையையோ கதையையோ பதிப்பிக்க ஏற்றதா என்பதை எப்படி ஒரு துணை ஆசிரியரோ, உதவியாளரோ தீர்மானிக்க முடியும்? வேண்டும் ஜனநாயகம்! படிப்பவர்கள் சொல்லட்டும், அது படிக்கத் தகுதியானதுதானா என்று’ என்பதுபோல நமக்குள் எண்ணங்கள் எழும்புவதும் இயற்கை. காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சு என்னும்போது, நம் எழுத்து நமக்கு காவியம்தான், சத்தியவாக்குதான்.
இதன் இன்னொரு பக்கமும் இருக்கிறது. எழுதுபவர் எண்ணிக்கை அதிகமாகும்போது, யார் இந்தப் படைப்புகளை சேகரிப்பது, தரம் பிரிப்பது, மின் வடிவத்தில் இணையத்தில் ஏற்றுவது, இதற்கெல்லாம் பொறுப்பேற்பது? ஐந்து கட்டுரைகளுடனும் வரும் ஒரு இதழில் ஐம்பது கட்டுரைகள் பதிப்பிக்கமுடியுமா?
இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதுதான், தன் படைப்புகளை தானே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி. ஆங்கிலத்தில் ப்லாக்கிங் (Blogging) என்றழைக்கப்படும் வலைப்பதித்தல் இன்று தமிழிலும் எளிதில் செய்ய முடிகிறது. உலகம் முழுவதிலும் இன்றைக்கு சுமார் 40 லட்சம் ப்லாக்ஸ் ( இனி நாம் வலைப்பதிவுகள் என்று அழைப்போம்) இருக்கலாம் என்று ஒரு செய்தி சொல்கிறது. இப்போதைக்கு தமிழில் சுமார் 7000 வலைப்பதிவுகள் வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழில் தம் எண்ணங்களை, படைப்புகளைப் பதிக்க ஆர்வமுள்ள ஒருவர், எந்தப் பெரிய கணினித் தொழில்நுட்ப அறிவும் தேவைப்படாமல், எந்த செலவும் செய்யாமல் இதைச் செய்ய முடியும். ஆர்வமும் உழைப்பும் மட்டும் இருந்தால் போதும்.
உங்கள் எழுத்துக்களை மின்குதிரை மேலேற்றி உலகம் முழுமைக்கும் கொண்டுசெல்லத் தயாராகிவிட்டீர்களா? வாருங்கள், மிக அடிப்படையான கணினி அறிவு, இணையத்தொடர்பு வசதி இவை இரண்டும் மட்டும் உங்களிடம் இருக்குமானால், எப்படி உங்கள் எழுத்துக்களை, எண்ணங்களை பொன்னெழுத்துக்களால் பதிக்க முடியாவிட்டாலும், மின்னெழுத்துக்களால் பதிக்கலாம் என்பதை இங்கு எளிய விளக்கங்களுடன் தெரிந்துகொள்ளலாம்.
இன்னேரம் உங்களுக்குள் சில கேள்விகள் தோன்றியிருக்கவேண்டுமே. இதோ உங்கள் மனதில் கிளம்ப வாய்ப்பிருக்கக்கூடிய கேள்விகளில் சில:
சிலர் சொந்தமாக வலைப்பக்கம் (homepage) வைத்திருக்கிறார்களே, அதற்கும் வலைப்பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?
ஓரளவுக்கு கணினி அறிவு வேண்டும் என்றால், எந்த அளவுக்கு?
தமிழில் தாளில் எழுதத் தெரியும். தட்டச்சு செய்யத்தெரியாது, அப்படியே தெரிந்தாலும் தமிழ் கீபோர்ட், சாப்ட்வேர் எல்லாம் வேண்டுமே எங்கே போவது?
சரி, நான் தேவையான சாப்ட்வேரெல்லாம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்து பயன்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளலாம். என் பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லாருக்கும் தமிழ் எழுத்து சரியாய்த் தெரியுமா? இப்போதே ஒரு சில பத்திரிகைகள் படிக்க முடிவதில்லை. நிறைய பான்ட் தொல்லைகள். இதுக்கு என்ன செய்வது?
என்னென்னவெல்லாம் எழுதலாம்? இலக்கியமெல்லாம் எனக்கு வராதே…
எனக்கு நான் சொல்ல நினைப்பதை எங்கேயாவது கொட்டிவிடவேண்டும் என்று ஆசை, ஆனால் என் பெயர் வெளியே தெரியக்கூடாது, அதுக்கு இதில் வழி இருக்கா?
சரி, நான் பாட்டுக்கு எழுதித்தள்ளுகிறேன், அதை யாராவது படிக்கிறாங்களான்னு எப்படித்தெரிஞ்சுக்கிறது?
படிக்கிறவர்கள், தான் என்ன நினைக்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லமுடியுமா?
இதற்கு என்ன செலவாகும்?
என் எழுத்துக்களை யாரும் காப்பியடித்துவிட்டால்?
இப்படிப் பதிப்பிப்பதால் எனக்கு எதாவது வருமானம் கிடைக்க வாய்ப்பு?
இப்படி எழுதுவதால் எனக்கு ஏதும் தொல்லைகள் வருமோ?
இதற்கெல்லாம் விடை தெரிந்துகொள்ளும் முன் தமிழில் உள்ள வலைப்பதிவுகள் சிலவற்றை நீங்கள் பாருங்கள். இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. எனவே இவற்றை எவ்விதத்திலும் உங்கள் கற்பனைக்கோ ஆர்வத்துக்கோ எல்லையாகக் கொள்ளவேண்டியதில்லை. ஒரு புரிதலுக்காக மட்டுமே.
இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பதிவுகளைப் பார்க்கலாம்:
http://djthamilan.blogspot.comhttp://tamilnathy.blogspot.comhttp://jyovramsundar.blogspot.comhttp://naayakan.blogspot.com
அரசியல், சமூகம் குறித்த கருத்துகளுக்கு சில மாதிரிகள்
http://www.vinavu.com/http://tamilsasi.com/
பல்சுவை பதிவுகளுக்கு:
http://asifmeeran.blogspot.comhttp://truetamilans.blogspot.com
திரைப்படம், திரைப்பட விமர்சனம் குறித்த பதிவுகளுக்கு
http://pitchaipathiram.blogspot.comhttp://jackiesekar.blogspot.comhttp://cablesankar.blogspot.comhttp://www.hollywoodbala.com
பங்குச்சந்தை, அறிவியல், தொழில்நுட்பம், கணினி மென்பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு:
http://fuelcellintamil.blogspot.comhttp://panguvaniham.wordpress.comhttp://tamilgnu.blogspot.com
மருத்துவம் குறித்த தகவல்களுக்கு
மருத்துவர் புருனோவின் http://www.payanangal.in/
இவ்வாறு சுமார் 7000 வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. என்ன உடனே ஒரு வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறதா ?
இப்பொழுது மேலே நாம் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடைகளை தேடலாம்.
வலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்
வலைப்பதிவுகள் - சில கேள்விகள்
ஒரு வலைப்பதிவின் அடிப்படை அடையாளங்கள்
வலைப்பதிவு சேவைகளும் எழுதுபொருட்களும்
முதல் வலைப்பதிவு மற்றும் தமிழ்மணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக